என்னுடைய ஆரம்ப கால ஓவியங்கள் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Thursday, 04 August 2011 04:26
- Written by editor
தமிழில் ஆரம்ப காலத்தில் வந்த அச்சுப்புத்தகங்கள் மேல் எனக்கு பெரிய மோகம். பெரிய எழுத்துப் புத்தகங்களும் , அதன் பழமை வாய்ந்த முகப்பும் அதில் வரும் பார்டர் அலங்கரிப்பும் நமது சுவர் ஓவியத்தை ஒத்த பலகை படங்களின் மீதும் பெரிய காதல் எனக்கு.
பள்ளி நாட்க்களில் இருந்து நான் கண்ட மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி இருந்த சுவர் ஓவியம் ( இப்போது நாம் அதை இழந்து – மூடத்தனமான திருப்பணி வேலை என்ற பெயரில் உயிரற்ற வியாபார ஓவியங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறோம்) . அப்போது தொடர்ந்து நான் ரசித்து வந்த காமிக்ஸ் கட்டங்களில் கூடிய நேர்த்தியான ஓவியங்களைக் கொண்ட சித்திரக் கதை புத்தகங்களும் ஆகும்.
ரத்தின நாயக்கன் அன் சன்ஸ் , ஸ்ரீமகள் கம்பனி வெளியிடுகள் மலிவுப் பதிப்பாகிலும் அதன் தரம் குறைந்த தாளில் இருந்தாலும் அவற்றின் எளிமையில் பாசாங்கற்ற நேரடியாகக் கதை சொல்ல வருகிற உருவங்களின் மீதும் , அவற்றின் உடல் மொழி மீதும் அலங்காரங்களின் மீதும் யாரும் அடிமைப்பட்டு விடுவர். ஒரு காலத்தில் நமக்கு புத்தக வழிப் படிமம் அதுவே. சென்னை ஓவியக் கல்லூரி வந்து சேர்ந்தப்பின் பக்கத்தில் இருக்கிற மூர்மார்க்கெட் புத்தகக் கடைகளில் ஓவியம் , காமிக்ஸ் புத்தகங்களைத் தேடி அலைவேன். என் தந்தை மாதச் செலவுக்குப் பணம் அனுப்பியவுடன் ஓவியம் தீட்டுவதற்க்கான பேப்பர் , வண்ணம் போன்றவற்றோடு புத்தகங்களையும் வாங்கி செலவு செய்துவிட்டு இப்புத்தகங்களைப் பார்த்துக் கொண்டே மாதத்தை கழிப்பேன். காமிக்ஸ்களோடு பெரிய எழுத்துப் புத்தகங்களும் சேர்ந்தன. ஒரு முறை ”ரத்தின நாயக்கன்” புத்தகக் கடைக்கே சென்று ஆர்வத்தில் பல கேள்விகள் கேட்டவுடன் அவர்கள் ஏதோ சந்தேகித்து என்னை விரட்டியதும் உண்டு.
பெரிய எழுத்துப் புத்தக ஓவிய அடிப்படையில் , அதன் தாக்கம் இருக்கும்படி தொடர்ந்து ஓவியங்கள் தீட்டி வந்திருக்கிறேன். அவற்றின் கட்டங்களில் உள்ள ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டங்களை மாற்றி அடுக்கியது போல் அமைத்தும் தொடர்ச்சியைக் கலைத்து வேறு அடுக்காக அடுக்குவதின் மூலம் புதிய கதை பார்வையாளனுக்கு தெரிய வருவது போலும் ஓவியங்கள் தீட்டியுள்ளேன் . 1980 களில் இவ்வாறான தொடர் ஓவியங்கள் சில ”கல்குதிரை” முதல் இதழ் மற்றும் கணையாழி இதழ்களின் அட்டையாக டெல்லி சாகித்ய அகடாமி இதழில் தொடர்ந்து கோமல் சுவாமிநாதனின் ’சுபமங்களா’ இதழ் நடத்திய நாடக விழா அழைப்பிதழ்களில் பல வருடம் தொடர்ந்தும் பயன்படுத்தியும் , அது மக்களிடம் திரும்பவும் நினைவில் சென்று அடைய வேண்டும் என்றும் பயன்படுத்தி வந்தேன்.
தன் ஓவியமாகத் தீட்டிய சில ஓவியங்களில் புலிகளை அப்போது ஆதரிக்க வேண்டிய அவசியத்தையும் தொன்மத் தோற்றத்தில் தீட்டியிருக்கிறேன். நான் பயன்படுத்தி பழக்கப்படுத்திய பிறகு அவற்றை தேடுகிற தமிழ் “woodcut” ஓவியங்களைப் பற்றிய புத்தகங்களும் , பாரதியின் அரசியல் கார்ட்டூன்கள் பற்றியும் புத்தகங்கள் வந்து விட்டது. குமுதம் இதழில் 90 களில் எழுத்தாளர் சுஜாதாவோடு வடிவமைப்பு ஆலோசகராக இயங்கிய போது அவர் என்னைத் தூண்டியதும் என இத்தொடர் ஓவியங்களைப் பற்றியும் மக்களிடம் இவற்றைக் கடத்தியதற்கும் பாராட்டுவார். பின் நாளில் சமீபத்தில் அவர் மறைவுக்கு முன் பங்கு பெற்ற ”அந்நியன்” திரைப்பட அழைப்பிதழை நண்பர் மூலம் அனுப்பி பார்க்கக் கூறிய போது நான் பார்த்து விட்டதாக கூறியதற்கு ”எப்படி ! பெரிய எழுத்துப் புத்தகப் படத்தை சினிமாவிற்குள் கடத்தி விட்டேன் பார்த்தீங்களா” என்று மகிழ்ந்தார்.
அனைத்து கட்டுரைகளையும் படிக்க ...






