பாரதியின் ‘முத்துமாரி’ -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Thursday, 04 August 2011 05:59
- Written by editor
பாரதியின் ‘முத்துமாரி’ என்ற பாடலைப் படித்தவுடன் வரைந்தது இவ்ஓவியம். தமிழ்நாடு அரசு நடத்திய பாரதி விழாவில் இவ்ஓவியமும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. பலதளத்தில் பாராட்டுப் பெற்ற எனக்குப் பிடித்த என் ஓவியங்களில் ஒன்று.
இளம் வயதிலிருந்து பார்த்த கோரிப்பாளையம் மாரியம்மன், இங்கும் மதுரை தல்லாக்குளத்திலும் 1950களில் நடந்த முளைப்பாரி விழாவும், பெண்களின், வளரித் தடியை அடித்தபடி பாடப்படும் ‘தாணாணேயும்’ ஆண்களின் ஒயிலாட்டமும், இரவெல்லாம் நடக்கும் ஒத்திகைகளும் அதைக் காணக் கூடியிருக்கும் அப்பகுதி கோரிப்பளையம் கிராம மக்களும், கரும்புள்ளி-செம்புள்ளி குத்தி நின்ற நாட்களும், கரகக்காரரும், புலியாட்டம் ஆடும் எங்கள் ஊர் சலவைத் தொழிலாளியும், தல்லாக்குளத்திலிருந்து முளைப்பாரிக்காக குடுகுடுப்பைக்காரன் வேஷம் கட்டி கிராமத்திற்காக வசூல் செய்ய கோரிப்பளையம் ரிக்ஷாவில் வரும் என் தாய்மாமன் பூசாரி கிருஷ்ணணும் ஒயிலாட்டத்திற்காக நானும் என் சகோதர்களும் வேஷம் கட்டி தலைப்பாகையில் சிறிய பாட்டரியில் இயங்கும் ‘பல்புடன்’ பெருமை பொங்க, கால் வலிக்கும்போது ரிக்ஷாவில் நின்றபடி மதுரை நகர் வலம் வரும் காட்சியும் என்று எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு உருவமாக வெளிப்பட்டதுதான் இந்த ஒவியம் என்று நம்புகிறேன்.
அழகர் கோவில் கோபுர கங்கையின் மீது நின்றபடி இருக்கும் ‘ராக்காயி’யும் ஆடியின்போது என் தாத்தா, அப்பத்தாவோடு போய் கொண்டாடிக் கோடிகட்ட நாட்களும் சேர்ந்துதான் இவ்ஓவியம்.
மழையைப் பெண் தெய்வமாக உருவக்கப்படுத்திய தன்மையுடன் அதன் சிகப்புச் சேலையும் வானமும் நீர்த்துளிகளும் அவருக்குப் பின்புறம் இருக்கும் படியான இயல்பான பேப்பர், பென்சில் ஓவியம் டிஜிட்டல் வண்ணம், புகைப்படம் என்ற என் கொண்டாட்டத்தின், மகிழ்வின் வெளிப்பாடாக நான் கருதுவதுதான் எனக்குப் பிடித்தது அனைவருக்கும் பிடித்திருக்கிறது.
இது முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டபோதே பெண் கலைஞர்கள் கனிமொழி, தமிழச்சி என எல்லோருடைய ஈர்ப்பையும் பெற்றதோடு ‘இப்படம் எனக்குத்தான் வேண்டும்’ என்று சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கேட்டுத் தன் ‘வனப்பேச்சி’ என்ற கவிதைத் தொகுப்புக்கு அட்டைப்படமாக 2006ல் வரைந்த இவ்ஓவியத்தைப் பயன் படுத்தினார்.
அனைத்து கட்டுரைகளையும் படிக்க ...






