வாராப்பர் வளரி -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Thursday, 04 August 2011 10:23
- Written by editor
என் தந்தை புரட்சியாளர் டிராட்ஸ்கியின் இயக்கம் சார்ந்தவர் என்பதால் புரட்சியாளர்களைகப் பற்றி அரிய புத்தகங்களை நிறைய சேகரித்து வைத்திருந்தார். எங்கள் இளம் வயதிலேயே அவற்றை நாங்கள் படிக்கத் தூண்டுவார்.
குஞ்சலி மரக்காயர் , திப்பு , கான்சாகிபு கம்மாத்தான் , புலித் தேவர் , மருது பாண்டியர் , கட்டபொம்மன் போன்றவர்கள் பற்றிய சிறு சிறு புத்தகங்களை எங்களுக்கு அளிப்பார். திப்புதான் அப்போதைய என் இளம் வயது “HERO”.
பின்பு என் குடும்பத்தோடும் கல்லூரி மாணவர்களோடும் இம்மாதிரியான மனிதர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது அப்போது மகிழ்வான ஒன்று. இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையேனும் திப்புவின் கல்லறை செல்வது வழக்கம்.
தென்னாட்டுப் புரட்சியை மிகத் தெளிவாக எழுதியவர் ராசய்யாத்தான். அவருடைய புத்தகம் என்னைப் பெரிதும் பாதித்ததுடன் என்னை தென்னாட்டுப் புரட்சியே முதன்மையானது என்று நிறுவ வேண்டும் என்கிற நோக்கில் தமிழில் சரித்திர படங்கள் வராமல் இருந்தாலும் – ”தேவதை” திரைப்பட அனுபவத்தினாலும் – ஒரு சரித்திரத் திரைக்கதையாக எழுதி ஓவியங்களும் தீட்டி வெகுகாலமாக முயற்சித்தேன். சில காரணங்களால் தாமதமாக்கியது . சிறு பகுதியும் திருடப்பட்டது பலரும் அறிந்ததே. இம்முயற்ச்சிக்காக வரைந்த ஓவியங்களே ”என் தமிழ் வரிசை”.
அவ்ஓவியங்களே ம.க.இ.க இயக்கம் பயன்படுத்தியது. ராசய்யாவின் நூலை வெகுகாலமாக என் ஓவியங்களை வெகுகாலமாக என் தேவைக்காக தொடர்ந்து படித்து வந்த போதும் பெரிதும் தெரியப்படாத வாராப்புர் ஜமினைப் பற்றி அறிந்து அவர்களின் தியாகத்தை அறிய முடிந்தது. நாடு கடத்தப்பட்ட பொம்மு நாயக்கர் மண்ணிற்க்காக செய்த தியாகத்தை தமிழகம் போற்ற மறந்த விட்டதாகும் – கொண்டாட மறந்து விட்டதாகும் என்று தான் சொல்ல வேண்டும். பல முறை முயற்சித்து கடைசியாக அதைக் கண்டுபிடித்து பொண்ணமாதேவிக்கு அருகில் இருக்கிற அவ்வூரையும் அந்த சிதலமான கோட்டையையும் அங்கு கிடைத்த போர் ஆயுதங்களையும் வளரியையும் அவற்றைப் போற்றி வணங்குகிற அக்கிராமத்தின் அன்பிற்கினிய மக்களையும் கடைசியாக இதற்க்காகவே நானும் எனது நண்பர்கள் வைகறை சந்திரசேகருடன் சென்று தரிசித்து வந்தேன்.






