ஓவியர் கே.எம். ஆதிமூலம் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Wednesday, 03 August 2011 20:01
- Written by editor
"ஆதி" என்ற எல்லோராலும் அழைக்கப்பட்ட ஓவியர் கே.எம். ஆதிமூலம் அவர்கள் நான் சென்னை வந்தபின் சந்தித்த மனிதர்களில் அறிய வந்தவர்களில் முதல்வர். அவரை உயர்ந்த ஓவியராக முதலில் நினைப்பதிலும் முதலாக அரிய மனிதராகவே நினைவில் நிற்கிறார் ஓவியக் கல்லூரி மாணவனாக 1970களில் இருக்கும்போது அவருடைய ஓவியக் கல்லூரி 1960களில் ஆன கல்லூரியிலேயே கிடந்த ஓவியங்களின் வழியாகவும் கல்லூரிக்கு சட்டம் அடிக்க வரும் அவருடைய ஓவியங்களின் மூலமும் அவரை அறிந்தேன்.
‘கசடதபற’ காலத்தைய அவருடைய மிதக்கும் குதிரையும் அல்லாது கழுதையும் அல்லாதது போன்ற மிருகத்தைக் கொண்ட சிறிய எண்ணெய் வண்ண ஓவியங்களின் மூலமும் அவருடைய கல்லூரித் தோழர்களான என் ஆசிரியர்கள் மூலமூம் அவர் அறிமுகம். என் ஓவியத்தை தற்செயலாகக் கல்லூரி வந்த ஆதிமூலம் கண்ணில் பட்டு ‘இது யார் வரைந்தது’ என அவர்கேட்டு பின் ஒரு நாளில் ‘இவன் தான் அது’ என்று அறிமுகப்படுத்தப்பட்டேன்.
அவருடைய நட்பு, என் வாழ்வில் கிடைத்ததற்கறிய ஒன்று. நான் அறிந்திராத மனிதர்கள் என்னைச் சந்திக்கும் போது ‘உங்களைப் பெரிதும் பாராட்டுவார்’ என்று அவர்கள் சொல்லும்போது நான் பெருமகிழ்ச்சி அடைவேன். முகம் தெரியாதவருக்கும் அவர் செய்த உதவிகள் பல. அவருடைய நினைவைப் போற்றி மணாவின் புத்தகம் அவர் பிறந்த ஊரில் வெளியிடப்படும்போது, பக்கத்து ஊரில் இருக்கும் நூலகத்திற்கு ‘சிறிது பண உதவி கிடைத்தால் நன்றாகயிருக்கும் நூல்களை அட்டவணைப்படுத்தி விடுவோம் என்று அவருக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டும். ஒரு கணினி வாங்க முழுப்பணத்தையும் அப்போதே அனுப்பிவிட்டார்’ என்று அவர் முகமும் அறியாத அந்தப் பெரியவர் என்னிடம் வந்து கூறினார். அன்று நடந்த கூட்ட மேடையில் எங்களோடு வந்திருந்த அவருடைய நீண்ட நாள் நண்பர் எஸ்.வீ.ராஜதுரை மிக விரிவாக இச்சம்பவத்தையும் சேர்த்து அவர் அறிந்த ஆதியைப் பற்றிபேசும்போது பேசி நெகிழ்ந்தார். 2002ல் நான் திரு. ஆதிமூலம் அவர்களை வரைந்தது.






