தும்பிகள் அல்லது தட்டான் பூச்சிகள் -சண்முகானந்தம்
- Details
- Published on Wednesday, 03 August 2011 08:09
- Written by editor
எந்த உயிரினமும் தன் வாழ்விடத்தை தானே அழித்துக் கொள்வதில்லை, ஆனால் மனிதன் மட்டும் அதைச் செய்து கொண்டே இருக்கிறான்.
நாம் வாழும் இவ்வுலகில் உள்ள உயிரினங்களில் முதலிடம் பூச்சிகளுக்குத்தான். நமது விலங்கியல் உலகில் ஏறத்தாழ சுமார் 90 விழுக்காடு பூச்சிகளே.
பூச்சியினங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பறக்கக் கூடியவை, பறக்க இயலாதவை. இதுவரை சுமார் 7,51,000 வகை பூச்சியினங்கள் கண்டறியப்பட்டடுள்ளன.
உயிரினப் பரிணாம வரலாற்றில் பூச்சிகளே முதன்முதலாக பறந்தன, இது சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு. 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பறவைகள் பறக்கத் தொடங்கின. வௌவால்களும் மற்ற சில சிறிய பாலூட்டிகளும் சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன் பறக்கத் தொடங்கின. தும்பிகள் இனம் தோன்றி சுமார் 300 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்றறியப்படுகிறது. இனி, விரிவாக பேசப்படுகின்ற தும்பிகள் எனப்படும் தட்டான் பூச்சிகளின் வாழ்வியலை காண்போம்.
பறக்கும் பிரிவில் உள்ளடங்கிய தட்டான் பூச்சிகள் இரு பிரிவுகளாக உலகம் முழுக்க சுமார் 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 500 வகைகள் உள்ளன. மழை, குளிர் காலங்களில் அதிக அளவில் தும்பிகளை காணலாம்.
தும்பிகள் சராசரியாக (Dragonfly) 4 அங்குல நீளம் இருக்கும். அதிகபட்சமாக 6 அங்குல நீளம் இருக்கும். ஊசித் தும்பிகள் (Damselfly) அதிகபட்சமாக 3 அங்குல நீளம் இருக்கும். தங்கத் தும்பிவகை (Golden Ringed Dragonfly) 8,000 அடி உயரத்திலும் வாழக்கூடிய தன்மை வாய்ந்தது. சிவப்பு மற்றும் கருப்பு நிறத் தும்பிகள் வெப்ப நாடுகளில் மட்டும் வாழ்கின்றது. தும்பிகள் பறவையினமாக அறிப்பட்டாலும், பிரிவு பூச்சி வகையில் Anisoplera வகையில் அடங்கும்.
தும்பிகள் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருந்தாலும், நெருங்கி பார்த்தால், தும்பிகளுக்கு தலையுடன் ஒட்டிய விளக்குகளைப் போன்ற நல்லா பார்க்கும் திறன் கொண்ட கண்கள் இருக்கின்றது. ஊசித்தும்பியின் கண்கள் சற்று அகன்றிருக்கும் . தும்பி மற்றும் ஊசித்தும்பிகளுக்கு 6 கால்கள் இருக்கும். இவை அதனுடைய உணவை பிடிப்பதிலும், அமர்வதிலும் மட்டும் பங்கு வகிக்கின்றன. தும்பியின் கண்களில் சுமார் 30,000 விழியாடிகள் உள்ளன .
தும்பிகள் சராசரியாக மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பறக்கின்றன. தனக்கான உணவை பிடிக்கும் போது 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பறந்தடிக்கும் என்பது ஆச்சர்யமான உண்மை. தும்பிகள் தன் உடம்பின் இரு பக்கங்களிலும் பக்கவாட்டில் விரைப்பான அகன்ற 4 இறகுகளைக் கொண்டவை. ஊசித்தும்பி தன் உடலின் மேல் பக்கத்தில் பின் நோக்கிய சிறகுகளைக் கொண்டிருக்கும்.
தும்பிகள் காற்றில் ஏற்படும் அசைவுகள், மாற்றங்களை பறக்கும் நிலையிலும் தனது உடல் ரோமங்களால் துல்லியமாக அறிந்து கொள்ளும். காற்றில் எளிதில் இயங்கக் கூடியதும், அம்பை போல் எய்யப்படும் திறனுடையதாலும் தனக்கான உணவை சுலபமாக பெற்றுவிடுகிறது. பெரிய தாடைகளால் எளிதாக பூச்சிகளை வேட்டையாட முடிகிறது. ஆம். புலி , சிறுத்தை, சிங்கம் போன்று தும்பியும் ஒரு இரைகொல்லியாகும். இது பறக்கும் நிலையிலேயே தன் உணவை வீழ்த்தும் திறமை படைத்தது. தும்பிகள் - சிறு பட்டாம்பூச்சி வண்டு, கொசு, அந்துப்பூச்சி மற்றும் சிறு தும்பிகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது. தும்பிகள் ஒரு தன்னின உண்ணிகளாகும்.
தும்பிகள் தமது தனித்த இரத்த குழாய் நாளங்கள் மூலம் மேல் நோக்கி எழவும், முன்நோக்கி செல்லவும் முடிகிறது. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு, பச்சை என பல்வேறு நிறங்களில் தும்பிகள் காணப்படுகின்றன.
இயல்பாக சிவப்பு நிறம் கொண்ட தும்பி அதே நிற தும்பியுடன் இணை சேரும். அபூர்வமாக சில வேளைகளில் மற்ற இனத் தும்பிகளுடன் இணை சேர்வதும் உண்டு, ஊசித் தும்பிகளுக்கு மற்ற இன ஊசித் தும்பிகளுடன் இணை சேரும்.
தும்பிகள் மற்றும் ஊசித்தும்பிகள் இணைசேர்வது இயற்கையின் அதிசய நிகழ்வாகும். பெண் தும்பி ஒரு புல்லின் நுனியை தன் கால்களால் இறுக பற்றிக் கொள்ள, அதன் வாயின் அடிப்பகுதி, ஆண் தும்பியின் கழுத்தை இறுகப் பற்றிக் கொள்கிறது. ஆண் தும்பி தன் வாலின் கடைசிப் பகுதியை பெண் தும்பியின் அடிவயிற்றில் பதித்து இணை சேர்கிறது. நீர்நிலையை ஒட்டி பறந்து செல்லும் போது, வாலின் அடிப்பகுதியை நீரில் தொட்டு, முட்டை விட்டு செல்லும். முட்டைகள் நீரில் மூழ்கி அடிப்பகுதில் தங்குகிறது.
நீரின் அடியில் உள்ள முட்டைகள் பொரிந்தவுடன் மீன்களைப் போல் செவுள்களின் மூலம் மூச்சுவிடுகிறது. குஞ்சுத் தும்பி (Nymph) 12முதல் 15முறை தோலுரிந்து முழு வளர்ச்சிடைந்து நீரிலிருந்து வெளியேறும்.
பாலித்தீவிலும், அந்தோனேசியாவிலும் தும்பிகளை மக்கள் உணவாக உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. கரிச்சான், நாகணவாய், பஞ்ருட்டான் போன்ற பறவை இனங்களுக்கு தும்பிகளே முக்கிய உணவாகும்.
பூச்சியினங்கள் அதிக அளவில் பெருகிவிடாமல் சமன் நிலையில் வைத்திட பறவைகளோடு தும்பிகளின் பங்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை சுழற்சியில் தும்பிகள் சுற்றுச் சுழலுக்கு பெரிய அளவில் நன்மை செய்கின்றன.
பூச்சிகளை தொடந்துதான் உணவாக்கிட தாமே பல பறவை இனங்களுக்கு உணவாக அமைந்து சூழலியல் சமன்பாட்டில் தும்பிகள் முக்கிய பங்காற்றுகிறது.
ஆந்தைத் தும்பி (OWLFLY): தும்பிக் குடும்பத்தை சேர்ந்த ஆந்தைத் தும்பி விசித்திரமானது. அதிகப் பறக்க இயலாதது, கண்கள் பெரிதாக காணப்படும். உடலின் பக்கவாட்டில் இறகுகள் அமைந்து இருக்கும். தலையில் இருந்து மேல் நோக்கிய வண்ணம் இரு உணர்கொம்புகள் இருக்கும். ஆந்தைத் தும்பிகள் காலை நேரங்களில் ஒய்வுவெடுக்கும். மாலை நேரங்களில் உணவைத் தேட துவங்கும். ஆந்தைத் தும்பிகள் எறும்பு வகைகளை விரும்பி உண்கின்றன. தேன் மற்றும் மகரந்தத் துளையும் உண்கின்றன. இவை காடு சார்ந்த பகுதிகளில் வாழ்கின்றன.
வண்ணத்துப் பூச்சிகளுக்கு அடுத்து பல வண்ணங்களில் மனதுக்கு இதமாக காட்சி தருவது தட்டான்கள் என்றால் அது மிகையல்ல. கிராமப்புற சிறுவர்களுக்கு தட்டான்கள் அவர்களது இளம் பருவத்தில் பிரிக்க முடியாத நிகழ்வாக விளங்கும். வாலில் நூலை கட்டுவது, இன்ன பிற தொல்லைகளை அந்த சிறு பூச்சியிடம் கட்டினாலும், அதனுடைய தோற்றத்திலும் வண்ணத்திலும் மனதை பறிகொடுத்து, அதனை பிடித்து விளையாடுவது என்பது தனி சுகமே.
நகர்புற குழந்தைகளுக்கு "கான்கீரிட் காடு" களுக்கு மத்தியில் தட்டான்களை தெரிந்து கொள்ள மட்டுமல்ல, பார்க்க நேரம் ஏது? புத்தக மூட்டையை சுமந்து சென்று வரவே நேரம் போதவில்லை? விளையாட ஏது நேரம். பூச்சிகளை பறவைகளை, இயற்கையை பற்றி தெரிந்து கொள்ள ஏது நேரம்.
இயற்கையை பற்றியும், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் பற்றியும் தெரியாமல் வளரும் அபாயம் இன்றைய குழந்தைகளுக்கு ஏற்பட்டிருப்பது வேதனையான உண்மை.
பள்ளிகளிலும், சுற்றுச்சூழல் சார்ந்த கல்வி மிகவும் மேம்போக்காகவே இருக்கின்றது. புத்தகங்களிலும், நிழற்படங்களிலும் மட்டும் தும்பிகளை பார்க்கக் கூடிய வாயப்பு நகர்ப்புற குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. நகரமயமாதல் மிக முக்கிய காரணமாக செயல்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்தின் அழிவும் இயற்கை உணவு சுழற்சியில் வேறொரு தளத்தில் மிக கடுமையாக எதிரொலிக்கவே செய்யும்.






