தெபாகா வீதிகளின் இராட்சத மரங்கள் - ச.விசயலட்சுமி
- Details
- Published on Monday, 06 February 2012 14:18
- Written by Super User
இலவமரப் பூக்களென செம்பிழம்பாயிருக்கும் மண்ணின்
ஈரம் மணம் வீசிக்கொண்டிருக்கிற
நிலத்தின் ஆதிக்குடிகளாயிருந்தோம்
ஒப்பனையற்றதொரு முகத்தில் தொய்யில் எழுதி மலர்சூட்டி ஆராதித்த பொழுதொன்றில்
மறைத்திருந்த ஆயுதங்கள் துளிர்விட்டன
பழுப்பு நிற சருகின் ஒலிக்குள் புதைந்திட்ட சிரிப்பலைகள்
பாண்டியாட்டத்திற்கு கட்டம் கட்டியாடியவர்களுக்கு புதிதாய் விரிந்தன அச்சத்தின் சாரம் ஆற்றுமணற்படுகைகள் சூறையாடிய
இரவின் காரிருள் பொழுதொன்றில் வல்லமை திரள் பறவைக்கூட்டம்
சிறகு விரித்து குனுகுக் குரலெழுப்பி தாவிப்பறந்தது
நாளங்கள் புடைக்கும்படி பதற்றத்தோடான தெறிப்பொன்றில்
துப்பாக்கி ரவைகளின் குறி பார்த்தல்
வாய்க்கரிசி போடுவதாய் பூமியின்
ஆதாரசுருதி அறுத்து தின்னப்பட
மண்ணுமில்லை
நீருமில்லை
மலையும் காடுமில்லை
துருத்திக்கிடக்கிற விதைதெறிக்க காத்திருக்கும் ஆயுதங்களின்
கூர்மையுள் குருதித்திவளை குபுகுபுவென பொங்க
சாதிக்கு நேராய் தோட்டாக்கள் திணித்த துப்பாக்கி
அணுவின் பெயரால் கட்டி உருவாக்குகிற நமக்குநாமே பலி
நதியும் உடைமையென்ற அபகரிப்பு
எல்லைகள் பிளந்திருக்க
நீதியும் நியாயமும் காட்டுப்பூனையாய் வேட்டைக்கு தயாராக
உதிர வாதைகளின் சங்கமத்தில்
வெடிக்கக் காத்திருக்கும் உயிர்களின் ஓர்மை உரு
நீ நான் களைந்து வீதிகளில் கூட
நகரங்களில் கிராமங்களில்
தெபாகா வீதிகளில் இராட்சத மரங்கள் கிளைக்கின்றன






