Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

[சிறுகதை] ஆயுத பூசை மகிமை - கி. நடராசன்

மக்கள் நண்பனான காவல்துறைக்கு ஆசை இருக்காதா என்ன? தெருவோரக் குட்டிக்கடைகள், சிறிய கடைகள், பெரிய ஸ்டோர்கள், மெகா மார்ட்கள், தொழிற்சாலைகள், வீடுகள், கோயில்கள், அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருந்தன. நம்ப போலிஸ் ஸ்டேன் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒரே ஒரு வேறுபாடு இருந்தது. மற்றவர்கள் அனைவரும் அவரவர் செலவில் ஆயுத பூசை கொண்டாடினர். மக்களின் நண்பர்கள் மக்கள் பணத்தில் விழா எடுத்து மகிழ்ந்தனர். சுருங்கக் கூறின் மற்றவர்கள் செலவில் மஞ்சா குளித்தனர்.

ஒட்டுமொத்த போலிஸ் ஸ்டேசனே வசூல் வேட்டையில் இறங்குவது பற்றி ஒன்றுகூடி சனநாயக முறையில் முடிவெடுத்தது. அவரவர்களுக்கு உரிய சாலைகள், தெருக்கள் காவலர்களின் கிரேடுகளுக்குத் தகுந்த மாதிரி பிரிக்கப்பட்டன. பெரிய பெரிய ஸ்டோர்கள் இருக்கும் சாலை இன்ஸ்பெக்டருக்கு என்றால், புதியதாகச் சேர்ந்த கான்ஸ்டபிளுக்கு தெருவோரக் கடைகள் அதிகமுள்ள தெரு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

“நல்ல வசூல் பண்ணணும். ஒரு  கடைகண்ணிய விடாதீங்க. யாரு அதிகம் வசூல் பண்றாங்களோ அவங்களுக்கு வசூல்ராஜா பட்டம் அளிக்கப்பட்டு, பெரியய்யா கையாலே வசூல் போனசு  கூடுதலாக வழங்கப்படும்.”

இன்ஸ்பெக்டர் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அனைவரும் ஆரவாரம்  செய்து வரவேற்றனர். வசூல் வேட்டையில் பங்கும் கூடவே போனசும் கிடைக்கும் என்றால் சும்மாவா?

நம்ம ஏட்டு ஐய்யருக்கு மட்டும் சிறிய தெருதான் ஒதுக்கப்பட்டது. நெய் மணக்கும் நெய்காரத்தெரு. கூடுதல் பொறுப்பாக அவருக்கு காவல் நிலையத்தைத் தூய்மைப்படுத்தல், பூசை, புனஸ்காரப் பணிகள் ஒதுக்கப்பட்டது. ஐய்யர் ஏட்டிற்கு தனது குலத்தொழிலையே தனக்கு ஒதுக்கீடு செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

போலிஸ் ஸ்டேசன் முழுவதையும் தூய்மைபடுத்தும் வேலைதொடங்கியது. இலேசில் முடியும் காரிமாக அது தெரியவில்லை. பல்வேறு வழக்குகளில் கைப்பறறி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் மோட்டார்கள்,  பைக்குகள், கார்கள், லாரி அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவைகள் துருப்பிடித்து உளுத்துக் கொட்டி, மண்ணோடு மண்ணாக மக்கி இரும்பு ஆக்சைடாக  மாறும் அதிசயத்தைக் காண்பதற்கான இராசயானக் கண்காட்சி அரங்கமாக விளங்கின.

இதையெல்லாம் ஐய்யர் ஏட்டு சுத்தப்படுத்தினார். அவர் தானே இந்த வேலைகளைச் செய்யும் இளிச்சவாயன் இல்லை. தினமும் சந்தேககேசில் (வழக்கு என்ற தமிழ் சொல் சந்தேககேசு’ என்பதன் முழுப் பரிணாம அர்த்தத்தை விளக்க பயன்படவில்லை) பிடித்து அல்லது  இழுத்து வரப்பட்டவர்களுக்குத்தான் போலிஸ் ஸ்டேசனை தூய்மையாக்கும் புண்ணியம் கிடைத்தது. கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை நம்ம ஆளுதான் என்று லோக்கலில் மார்தட்டும் சில அல்லக்கைகளுக்கும்   அந்தப் புண்ணியம் கொஞ்சம் போய் சேர்ந்தது!

ஓராண்டாக மண்டிக் கிடந்த புற்கள், குப்பைகள் அகற்றப்பட்டு ஒட்டடைகள் அடிக்கப்பட்டது. ஆசிடும், பினாயிலும் ஊற்றி தரைமுழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. ஆனால், லாக்கப்பில் எவ்வளவு ஆசிட், பினாயில் ஊற்றினாலும் அதில் அப்பிக்கிடந்த அழுக்கும், சிதைக்கப்பட்ட மானுடத்தின் நாற்றமும் மறையவில்லை. ஐய்யர் ஏட்டு இந்தப் பணிகளுக்குத் தலைமை ஏற்று திறமையை நிரூபித்தார்.

ஆயுத பூசை நெருங்க நெருங்க வசூல் வேட்டை தீவிரம் அடைந்தது. இன்பெக்டர் தங்க ஆபரண விற்பனையாளர் சங்கத்தின் செயலாளரான மார்வாடி சேட் பங்களாவிற்கு வசூலுக்குச் சென்றார். சேட் தடபுடலாக வரவேற்றார். இன்ஸ் வந்திருக்கும் மர்மத்தை சேட் புரிந்து வைத்து இருந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளை இன்னும் துப்பு துலங்காமல் இருப்பதை வருத்தத்துடன்  பகிர்ந்து கொண்டார்.

“ஒரு வாரத்துக்கு முன்தால் பெரிய கிளப் பார்ட்டியில் பெரியாக்களைக் கண்டுகிட்டோம். உங்களுக்கும்,  ஸ்டேசனுக்கும் வேண்டியது தந்திடுரோம்.”

சேட் சொன்னதை இன்ஸ்பெக்டர் புரிந்து கொண்டார். பதவி ரேங்கிற்கு தகுந்த மாதிரி சவரன் அன்பளிப்புகள் படிப்படியாக ஏறி இறங்கி வந்தன.

பதியதாகப் பணியில் சேர்ந்த கான்ஸ்டபிள் தொப்பைக்கானுக்கு இந்த வசூல் வேட்டை தர்மச்சங்கடத்தைத் தந்தது. கடமை, நேர்மை தேசப்பற்று போன்ற சிலதுகளுக்காவும், அரசங்க உத்யோக ஆசையிலும் எப்படியோ ’அடித்து பிடித்து’ அவன் கான்ஸ்டபிளாக சேர்ந்து விட்டான். அவனின் கனவுகளுக்கு விழுந்த முதல் அடி...
ஸ்டேசனில் சேர்ந்த அன்று இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு எடுபிடி வேலைக்கு அனுப்பப்பட்ட பொழுது நேர்ந்தது.  

ரோந்து போக வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் முதல் மாதச் சம்பளத்தில் புதியதாக மிதிவண்டி ஒன்றை தொப்பைக்கான் வாங்கினான். ஐய்யர் ஏட்டு மிதிவண்டியைப் பார்த்து விட்டுச் சொன்ன வார்த்தை…..

“சைக்கிள் வாங்கினியே..  அதில் பெட்டி வாங்கி ஜாயிண்ட் பண்ணவேண்டியதானே. அந்தப் பெட்டிதான் போலிஸ்காரன்னு சொல்லுவதற்கான அடையாளம்.... ”

கடைசி வார்த்தையை அழுத்திச் சொன்னார். அதன் அர்த்தம் புரிந்ததும் , சுயமரியாதை உள்ள அவன் மிதிவண்டியை சில நாட்கள் கொண்டு செல்லவில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்கு அந்த வைராக்கியம் நீடிக்கவில்லை என்பதை இங்கு பதிவு செய்வது அவசியமாகும்.

புதியதாகச் சேர்ந்த கான்ஸ்டபிள்கள் இருவருக்கும் தெருவோரக் கடைகள் நிறைந்த சாலை ஓதுக்கப்பட்டது. அவர்கள் சரியாக  வசூலிக்கின்றனறா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு ஐய்யர் ஏட்டிற்கும் ஒப்படைக்கப்பட்டது.

வெள்ளை வேன் வசூல் வேட்டைக்கு கிளம்பியது. ரோந்து போனது மாதிரியும் இருக்கும், வசூலித்தது மாதிரி இருக்கும் என்று ஒரே கல்லில் இருமாங்காய் அடித்தார் ஏட்டு. இந்த வெள்ளை வேன் வசூலினால் தொப்பைக்கான் தனது தன்மானத்திற்கு இழுக்குவந்ததாக நினைத்து மிகமிக வருந்தினான்.. அரசு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு, அதுவும் இடஒதுக்கீடு இருந்ததானல் இவனுக்குக் கிடைத்தது என்பதுதான் உண்மை.  வேறு வழியின்றி காலப்போக்கில் சகித்துக் கொண்டான். நாருடன் சேர்ந்த பூவும் நாற்றம் அடித்தது.

“பத்து பதினைந்து என்று கொடுக்கிறதை வாங்க இது மாதமாதம் வசூலிப்பது கிடையாது. ஆயுத பூசை வசூல்....... கணிசமாகக் கேட்டு வாங்கனும். கடைக்கு  நூறாவது வசூலிக்கனும் .”

இரு  கான்ஸ்டபிளுக்கு வசூல் வேட்டை நடந்துவது பற்றி ஐய்யர் ஏட்டு விரிவாக வகுப்பு எடுத்தார். ஆயுத பூசைக்கு தெருவோரத்தில் ஏரளாமான கடைகள் முளைத்துக் கிடந்தன. பொரிகடைகள், பூசணிக்காய்-தோரணம் கடை, வாழைக்கன்றுகள் கடை என்று விதவிதமாகப் பழைய தெருவோரக் கடைகளுடன் புதிய கடைகளும் சேர்ந்து கொண்டதால் ஏட்டு வசூல் கொட்டும் என மிகவும் உற்சாகமானார். நூறு ரூபாய் கொடுக்காதவர்களைக் கடையை காலி பண்ண சொல்லி கான்ஸ்டபிள்கள் மிரட்டினர். இப்படி மிரட்டி மிரட்டியே  மகா வசூல் செய்தனர். யாராவது ஏடா கூடாமாக தொனி மாறிப் பேசினால் லட்டியால் லேசாக ஆளையோ, கடையில் இருந்த பொருளையோ தட்டி தங்கள் இறையாண்மையை நிரூபித்தனர். பின்னால் சிலர்   புலம்பினாலும் சிலர் உரக்கத் திட்டினாலும் அதைக் கண்டு கொள்ளாமல் ’காரியத்தில்’ கண்ணாக இருக்கும்படி கீதா உபதேசம் செய்தார் ஐய்யர்.


புதிதாக  அந்தத் தெருவின் ஒரத்தில் தார்பாய் தடுப்பில் இட்லிக் கடை ஒன்று முளைத்து இருந்தது. அங்கு இளைஞன் ஒருவன் சுறுசுறுப்பாக இட்லி தோசை வாடிக்கையாளர்களுக்குத் தந்து கொண்டிருநதான்.

தொப்பைக்கான் போலிஸ் உடையில் போய் நின்றதும், குறிப்பால் உணர்ந்துகொண்டு ஐம்பது ரூபாய்  பணிவுடன் கொடுத்தான்.

“இன்னும் அம்பது எடுடா! ”

“சார்ர்.. இப்பதான் கடைய திறந்தோம்”
அந்த இளைஞன் இழுத்தான்.

”நடைபாதையில் கடையைப் போட்டுட்டு எதிர்த்தா பேசற நாதாரி...”

லட்டியில் லேசாக தொப்பைக்கான் அந்த இளைஞனைத் தட்டினான்.

“ஐய்யோ.. அம்ம்மா..”

அவன் லோசக முனகினான். தோசை சுடுவதில் மும்முரமாக இருந்த அவன் அம்மா திரும்பினாள். தாய்க் கோழி தனது குஞ்சைக் கொத்த வரும் கழுகிடம் இருந்து காப்பாற்ற செயல்படும் தார்மீகக் கோபம் ஒருகணம் அந்தத் தாயிடம் தோன்றி  இயலாமையால் கரைந்தது.

எதிரில்  கையேந்திக் கொண்டிருந்த தொப்பைக்கானை பார்த்தாள். அந்த வயதான தாயின் சுருக்கம் விழுந்த  கண்களை நேருக்க நேர் அந்தக் கண்கள் சந்தித்தன. தெறிந்த பரிவின் தீட்சம் அவனை நிலைகுலைய வைத்தது.

அவன் நின்ற அன்னைபூமி வெடித்து அவனை விழுங்கியது. அவன் தலை சிறுத்து இதயதிற்குள் ஓடி ஒளிந்து கொள்ள இடம் தேடியது. தான் பிறந்து வளர்ந்து இப்படிக் கேவலமான மனிதனாக இருப்பதற்கு, இல்லாமல் செத்தொழிந்து இருக்கலாம் என்று அவன் நினைத்தான்…….

பெல்லாவைக் காட்டிக்கொண்டு அலுமனியத்தட்டைத் தூக்கிக் கொண்டு அந்தக் கிராமத்தின் தெரு மூளையில் ஆப்பக்கார அக்காவை சுற்றியிருந்த கூட்டத்தை விலக்கி அந்தக் குழந்தை எட்டிப் பார்த்தது. தொப்பைக்கான் குழந்தையாய் இருக்கும் பொழுதே அவன் அப்பா இறந்து விட்டதால் அவனது அம்மாதான் அவனைக் காப்பாற்றினார். கூலி வேலைக்கு கழனி காட்டுக்குக் போனால்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற  நிலைமை. வறுமை தாண்டவமாடியதால், குச்சிக்கு கை கால்கள் முளைந்த நேஞ்சான் சோகை குழந்தையாக அவன் இருந்தான். வேலைக்குப் போகும் பொழுது பழைய கஞ்சியை அல்லது கூழை சிறுவனுக்குத் தரும்படி உறவினரிடம் சொல்லி விட்டு அவன் அம்மா செல்வாள்.

தொப்பைக்கானின் அகோரப் பசிக்கு அது போதவில்லை. எல்லாரும் தட்டையும் கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டு போவதைப் பார்த்து, இவனும் தட்டை எடுத்துக்கொண்டு போய் ஆப்பக்கார அக்காவிடம் தட்டை நீட்டுவான். அவர்கள் காசு கொண்டு செல்வது இவனுக்குத் தெரியாது. ஒருகணம் தலையை நிமிர்த்தி காசு எங்கே என்பாள்.

பீளை தள்ளும் இவன் விழிகளுக்கு அதன் அர்த்தம் புரியாது! அவள் சிரித்துக் கொண்டு ஆப்பம் தந்து அனுப்புவாள். இது ஒரு நாள் அல்ல... பல நாள்கள் நடந்தது. வட்டமாக பளபளப்பான வெள்ளைக்கருவுடன் மின்னும் மஞ்சள்கரு முட்டைதோசை வேண்டும் என்று இவன் ஒருநாள் அடம் பிடித்தான். முட்டை எடுத்து தட்டி உடைத்து ஊற்றியதும் அதன் மஞ்சள்கரு அப்படியும் இப்படியும் அலைவதை ஆச்சரியத்துடன் அந்தக் குழந்தைப் பார்த்தது. விதவையான ஆப்பக்கார அக்காவிற்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. இதில் வரும் செற்ப வருமானத்தை வைத்துதான் அவள் குடும்பம் தள்ள வேண்டும்.

“வீட்டில் சும்மா உட்கார முடியவில்லையா”

தொப்பைகான் அம்மா அவன் முதுகில் இரண்டு இழுப்பு இழுத்ததில், அவன் அலறிய அலறல் அந்த ஊரே கேட்டது.

“சும்மா நித்துடி……… குழந்தைக்கு இன்னா தெரியும்... அத போய் இப்படி அடிக்கிற?” என்று ஆப்பகார அக்கா திட்டினாள்.

அதன் பிறகும் அந்தச் சிறுவன் காசு இல்லாமல் வெறும் தட்டுடன் வருவதும் நிற்கவில்லை. அந்தத் தாய் தினமும் அவனுக்கு முட்டை தோசை,  இட்லியை அன்புடன் தருவது நிற்கவில்லை. நோஞ்சான அவன் புஷ்டியாகும் வரை இது தொடர்ந்தது…

இன்று கட்டுமஸ்தான கட்டுடலுடன் நின்றாலும், ஒரு கணம்  தொப்பைக்கான்  நிலைகுலைந்து தள்ளாடினான். இந்த உடல்வாகுக்கு அடிஉரம் இட்ட அந்தத் தாய்க்கு, அவனை அடையாளம் தெரியவில்லை. ஊளை மூக்குடன் சோகையில் துருகிய வயிருடன் இருந்த சிறுவன் இப்படி வாட்ட சாட்டமாய் காக்கி உடையில் வளர்ந்திருப்பதை அவளால் அறிந்து கொள்ள இயலவில்லை! மனிதனை விஞ்சி காக்கிச்சட்டை அதிகாரமே கண்ணில் துருத்திக் கொண்டு இருந்தது.

அவளது வாழ்க்கை கிராமத்து ஆப்பக்காரக் கடையில் இருந்து  நகர்ப்புற  நாஸ்தா கடைக்கு ’முன்னேற்றம்’ கண்டதுதான் மிச்சம். 
ஆப்பமும், முட்டைதோசையும் தின்ற அந்த சோகை சிறுவன் வளர்ந்து கான்ஸ்டபிளாக லட்டியுடன் லஞ்சம் கேட்டு நிற்கிறான்! அதிகார பிச்சை!!
என்ன கேவலமான தொழில் என்று மனம் குமைந்தான்.  கையிலிருந்த ஐம்பது ரூபாய் நோட்டை அந்த இளைஞன் கையில் திணித்து விட்டு, தலைகுனிந்தவாறு  அந்த இடத்தை விட்டு நடையைக் கட்டினான். இன்னும கொஞ்சம் நேரம் நின்றால் நெஞ்சு வெடித்து அழுகை பீறிடலாம்…

இப்பவும் ஒரு குட்டிப் பெண் கிண்ணத்துடன் கையில் காசில்லாமல் ஆப்பக்கார அம்மாவிடம் சென்றுக் கொண்டு இருந்தை அவன் கண்டான்..

இப்படியாகச் சில நெருடல்கள் இருந்தாலும் கூட ஆயுத பூசை வசூல் அடை மழையாய் அந்த போலிஸ் ஸ்டேசனில் கொட்டித் தீர்த்தது!

ஐய்யர் ஏட்டு அதிகாலையில் எழுது சுத்தபத்தத்துடன் ஆயுத பூசை புணஸ்கார கடமைகளை வீட்டில் முடித்துக் கிளம்பினார். இன்று ஸ்டேசனில் அவருக்கு நிறைய வேலைகள் காத்திருந்ததன. ஒருபக்கம் பூசைக்கான வேலைகள் என்றால் மறுபுறம் அவரவரர் வசூல் செய்ததை வாங்கி கணக்கு வைக்க வேண்டும்.  கொஞ்சம் அசந்தால் ஒவ்வொருவரும் மற்றவர்களும் பட்டை நாமம் போட்டு விடுவார்கள். ஒவ்வொருத்தரை பத்தி யோக்கியதையும் ஒவ்வொருத்தருக்கும் அத்துபடி.!

அப்படி இருந்தும் ஒவ்வொருத்தரும் அவரவர் வசூலில் முடிந்தளவு அமுக்கி விட்டது  ஊரறிந்த உலகறிந்த இரகசியம்.

பொரி,  பழம், பூவிலிருந்து….. பணம் வரை அவரவர் பதவிகேற்ப பங்கு பிரிக்கப்பட்டது. காலம் காலமாக நடைபெறும் தொழில் என்பதலால் எந்தச் சிக்கலும் வரவில்லை.  இன்ஸ்பெக்டர் தலைமையில் சுமுகமாக பங்குகள் பிரிக்கப்பட்டது.

மாலை ஆறுமணிக்கு ஆயுத பூசை ஆரம்பித்தது.  லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, பிள்ளையார், சிவன் என எல்லா கடவுள்களும் வரிசையாகப் படங்களில் தொங்கிக் கொண்டு புன்முறுவல் பூத்தவண்ணம் இருந்தனர்.

“பூசணிகாயெல்லாம் ஓசியில் ஒடைச்சா சாமி குத்தம்.. மூணு பூசணிக்கா வாங்கியாந்திடு.”

ஐம்பது ரூபாய் நோட்டை தொப்பைகானிடன் ஐய்யர் தந்தார். ஐம்பது ரூபாய்க்கு எவன் மூணு பூசணிக்காய்கள் தருகிறான் என்று அவனுக்கு விளங்கவில்லை. ஒரு பூசணிக் காய் ஐம்பது ரூபாய் என்று சொன்ன கடைகாரனிடம் மூன்று பூசணிகாய்களை எடுத்துக் கொண்டு ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டு ஐலாசிரிப்பை உதிர்த்து விட்டு தொப்பைக்கான் நடையைக் கட்டினான்!

வாழைக் கன்றுகள், வாழை மரங்கள், தென்னைக்குருத்துத் தோரணம், மாவிலைத் தோரணம்  என்று போலிஸ் ஸ்டேசனுக்கு புதிய கலை பொலிவு வந்து விட்டது.

உயர்ரக சந்தனத்தைக் குழைத்து கரைத்து ஸ்டேசன் முழுவதும் ஐய்யர் ஏட்டு பளிச்பளிச்சென தெளித்தார். ’ஸ்டேசன் வாசனை’ போய் சந்தன வாசனை கமழ்ந்தது. பெரிய பெரிய வாழையிலைகளில் பொரிகடலை, ஆப்பிள், பேரிக்காய் வாழைப்பழம் என  அனைத்து ஐட்டங்களும் மலை போல் குவிக்கப்பட்டு இருந்தது. வேட்டை வசூலின் ஈடுபட்ட போலிஸ் ஸ்டேசனின் உழைப்பு அதில் தெரிந்தது.

ஒயர்லெஸ் மைக் அலறியது. ஆனால்,  அது என்ன பேசுகிறது என்றுதான் யாருக்கும் விளங்கவில்லை. ஒயர்லெஸ் கருவி பழுதாகி விட்டதா என்று கும்பல் கூடி ஆராய்ந்தனர்.

“இப்பதான் புதிசா வந்து இறங்கியது. அதற்குள்ளாக ரிப்பேரா?”

எஸ்.ஐ அலுத்துக்கொண்டார். தொப்பைகான் ஒயர்லெஸ் கருவியை பார்த்துக் கொண்டிருந்தான். முன்னும் பின்னும் அதைப் பார்த்த அவனுக்கு உண்மை விளங்கிவிட்டது.
சந்தனத்தைக் குழைந்து தெளித்ததில் மொத்தமாக அதன் மைக்கில் அப்பிக் கொண்டதால் வந்த வினை என்று புரிந்து கொண்டான். அதை அகற்றியதும் ஒயர்லெஸ் தெளிவாக வேலை செய்தது.

புதியதாக சேர்ந்த  இரண்டு கான்ஸ்டபிள்கள் இருவரும் மஞ்சள் கிண்ணம், குங்கும கிண்ணம் ஏந்தி வர ஐய்யர் எல்லாவற்றிற்கும் மஞ்சளும் பொட்டும் வைத்தார். காலையிலிருந்து ஐய்யர் ஏட்டு கடும் உழைப்பு செய்தால் மாலையில் யாருக்கும் தெரியமால் கொஞ்சமாக தீர்த்தம் அருந்தினார். இன்ஸ்பெக்டர் உபயமான  அந்த உயர்ரகத் தீர்த்த மகிமையால் ஐய்யர் வாரி வாரி எல்லா இடங்களிலும் மஞ்சளைப் பூசி குங்கும பொட்டு வைத்தார்.
கம்யூட்டர் மானிட்டரில்  பெரியதாக மஞ்சள் தடவி குங்குமம் வைத்தார். குங்குமம் கீபோர்டு முழுக்கக் கொட்டியது. இதைப் பார்த்த ரைட்டர் தலையில் தலையில் அடித்துக் கொண்டார். 302 துப்பாக்கிகளுக்கும், பைனட்டுகளுக்கும் மஞ்சள் குங்குமம் பூமாலை அணிவிக்கப்பட்டது. பைனட்டில் ஐய்யர் அழுத்தி குங்குமம் வைக்க அது அவரது விரலை லோசக பதம் பார்த்தது. குங்குமம் மகிமையில் தீர்த்த போதையில் அது  பெரியதாகத் தெரியவில்லை.

எல்லாம் முடிந்து ஆயுத பூசைதொடங்கலாம் என்று பார்த்தால் இன்ஸ்பெக்டரைக் காணவில்லை. அலைபேசியில் தொடர்பு கொண்டதில் அவர் ஆயுத பூசைப் பார்ட்டியில் ஒன்றில் மகிழ்ந்து கொண்டு இருப்பது புரிந்தது. அவர் வருகைக்காக அனைத்துக் காவலர்களும் காத்திருந்தனர்.

“இந்த ஆளுக்கு காலம் நேரம் தெரியாமப் போயிட்டதே”

அனைவரும் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.  இன்ஸ்பெக்டர் வந்து இறங்கினார். ஆயுத பூசையை ஆரம்பிக்க ஆணையிட்டார்.

ஐய்யர் ஏட்டு கற்பூரம் ஏற்றி சூடம் பழம் பூசணிக்காய் காட்டினார். பூசணிக்காயை நடுரோட்டில் போட்டு உடைத்தார்!
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பூசை செய்ய வந்தார். அதற்குள் ஐய்யர் ஏட்டு..

“ஐய்யா...உங்க கைத் தூப்பாக்கியைக் காட்டுங்க… அதற்கு பொட்டு வைக்கனும்” என்றார்.

பெல்டிலிருந்து இன்ஸ்பெக்டர் கைத்தூப்பாக்கியை எடுத்து ஐய்யரிடம் நீட்டினார். இரண்டுபேர் கைகளும் ஆயுத பூசை மகிமையில் லேசாக நடுங்கின.

ஐய்யர் ஏட்டு குங்குமத்தை ஸ்டிகரில் அழுத்தி வைக்க, அது பட் ..பட்….டென்று வெடித்தது. ஐய்யர் ஏட்டு மார்பில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியானார்.

“ஆயுதபூசையில் தவறுதலாக கைப்பட்டு ஐய்யர் ஏட்டு மரணம்.” 

மறுநாள் அனைத்து தினசரிகளில் செய்தி பிரசுரம் செய்தன.

“ஐய்யர் ஏட்டு திட்டமிட்டு படுகொலை!
பெரியாரிஸ்டுகள்... மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் அம்பலம்!”

சில தினசரிகள் இப்படியும் செய்தியைக் கக்கின.
----------------------------------------------

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS