சிற்றிதழ் அறிமுகம் - உழைப்பவர் ஆயுதம்
- Details
- Published on Sunday, 29 January 2012 04:31
- Written by Super User
கூடங்குளம் அணு உலை குறித்த கோபத்துடன் துவக்கும் ஆசிரியர் உரை தமிழர்கள் ஒவ்வொருவருடைய மன வேதனையை பிரதிபலிப்பதாக உள்ளது.
நமக்கான அரசியல் தலைமை இல்லாத்தால் தான் ஈழத்தில் பின்னடைவு, முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற ஆற்று நீர்ச் சிக்கலில் தமிழகத்தின் உரிமையை இழந்தது, கலபாக்கம், கூடங்குளம் அணு உலைகளை நமது தலையில் கட்டுவது என அடிமைத் தமிழனின் சோகம் தொடர்கிறது என்பதை ஆசிரியர் உரை தெளிவுபடுத்துகிறது.
திருவண்ணாமலையில் இருந்து 2006 முதல் வெளிவரும் 'உழைப்பவர் ஆயுதம்' ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை தமிழர்களுக்காக பேசுகிறது என்றால் அது மிகையல்ல. கார்த்திகை, மார்கழி, தை - இதழ் முழுக்க சங்க கால தமிழர்களை பற்றிய ஆய்வுக் கட்டுரை விரவிக் கிடக்கிறது. முனைவர்.க.மோகன்காந்தி எழுதிய 'சங்கத் தமிழரின் நீரியல் சிந்தனைகள்' கட்டுரை மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரையாக உள்ளது. மழைநீர், ஆற்று நீர், கிணறு, குளம்,ஏரிகள் மற்றும் கடல் நீர் என பிரித்து பயன்படுத்தும் போது சங்க கால தமிழர்களின் நீர் பற்றிய நுட்பமான அறிவு புலப்படுகிறது. சங்க இலக்கியங்களில் இருந்து ஆதாரத்துடன் எழுதும் ஆசிரியரின் எளிய நடை கட்டுரைக்கு அழகு சேர்க்கிறது.
தேநீர் என்றாலே உடனே மலையாளிகள் தான் நினைவுக்கு வருகிறார்கள். அந்தளவிற்கு தமிழகத்தின் தேநீர் கடைகள் அனைத்தும் மலையாளிகள் கையில் உள்ளது. ஆங்கிலேயர் வருகைக்கு பின் தேநீர் என்பது தமிழர்களின் கலாசாரத்தின் அடையாளமாக மாறிவிட்டது எனலாம். சீனர்களுக்கு, தமிழர்களுக்கு தேநீர் எப்படி பண்பாட்டில் கலந்தது எனபதை 'சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டில் தேநீர்' கட்டுரையில் முனைவர். கு.சிதம்பரம் தெளிவுற விளக்குகிறார்.
நாம் சாதாரணமாக பார்க்கும் 'ஆட்டுரல்' -யை தொல் தமிழர்கள் மழை மானியாக பயன்படுத்திய விதம் நம்மை வெட்கித் தலைகுனிய செய்யும். தொல் தமிழர்களின் பாசன முறை, அது குறித்த நுண் அறிவு என வெள்உவனின 'தொல் தமிழரின் பாசன முறைகள்' கட்டுரை விரிவாக பேசுகிறது.
தமிழகத்தில் கோயில்கள் 50,000 - க்கும் மேல் இருக்கும் என்று ஆரம்பிக்கும் கட்டுரை, கோயில்களில் உள்ள கட்டிட கலை, ஒவியம், சிற்பம், கோயில்களின் வகைகள் என சங்க கால தமிழ் அரசர்களின் பெருமைகளையும், திறமைகளையும் பேசுகிறது. ஒவ்வொரு அரசனும் கட்டிய கோயில்களின் சிறப்புகள், அதனுடைய கட்டுமானங்கள் என 'அறிவோம் ஆலயம்' கட்டுரை மூலம் கோயில்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து இருக்கிறார் தொல்லியல் அறிஞர்.மா.சந்திரமூர்த்தி எம.ஏ.,
முதலாளித்துவத்தின் உச்சம் ஏகாதிபத்தியம் என்றார் காரல் மார்கஸ். ஏகாதிபத்தியம் எவ்வழியிலும் ஏழை நாடுகளை சுரண்டும் என்பதற்கு 'பி.டி.கத்திரிக்காய்; அமெரிக்காவின் புதிய போர்க்கருவி' என்ற கட்டுரையில் உணவு வகைகளிலும் தனது கரங்களை நீட்டுகிறது என்பதை தோழர். நக்கீரன் விரிவாக பேசுகிறார்.
பாரி எழுதியுள்ள 'நாடோடிய இயக்கமும் பதானிய கழைக் கூத்தாட்டமும்' கட்டுரையும், தோழர். வெள்உவன் எழுதியுள்ள 'உயிர் எழுத்துகளும் ஒரை வட்டமும்' கட்டுரையும் நூலுக்கு பலம் சேர்க்கின்றன. மாற்றுத் திரையின் முக்கியத்துவம் பற்றி திருவண்ணாமலையில் நடந்த பயிற்சி பட்டறையை பேரா.சு.பிரேம்குமார் தனது எளிய நடையில் பதிவு செய்துள்ளார்.
சங்கத் தமிழர்களை பற்றியும், அவர்களின் நீரியல் சிந்தனை, பாசன நுண்ணறிவு, கோயில்களில் காணப்படும் ஒவியம், சிற்பம், கலை பற்றி ஆய்வுத் தேடலுடன் அமைந்துள்ளது 'உழைப்பவர் ஆயுதம்'
சங்க கால தமிழரின் பெருமையை இழந்த, சொந்த வரலாற்றை மறந்த, சொரணையற்ற இனமாக உள்ள தற்கால தமிழனுக்கு தன் வரலாற்றை எடுத்துச் சொல்ல வந்திருக்கும் ஆயுதமே 'உழைப்பவர் ஆயுதம்'
ஆசிரியர் ; த.ம.பிரகாஷ்
மணிமொழி வெளியீட்டகம்,
உழைப்பவர் ஆயுதம்,
220 ஏ, போளுர் சாலை, 7வது தெரு,
முல்லை வீதி,
தந்தை பெரியார் நகர்,
திருவண்ணாமலை - 606 601.
தொடரபுக்கு ; 04175 - 251980.
அலைபேசி: 98435 03090, 94886 57729.
தனி இதழ் - ரூ.35.00






