புறநானூற்றுக் குறிப்பு மதிப்புரை

புறநானூற்றுக் குறிப்பு மதிப்புரை

பேராசிரியர் சு. வேங்கடராமன்

சாஸ்திரியாரின் புறநானூற்றுக் குறிப்பு என்ற தொகுப்பு நூல் மிகச் சிறந்த ஆவணமாக அமைந்துள்ளது. இன்றைய நிலையிலிருந்து பார்க்கும்பொழுதுகூட முழுமையான தேடல் வேட்கையோடும் பதிவாகாத ஒன்றைப் பதிவுசெய்யவேண்டும் என்ற ஆய்வு விழைவும் கொண்ட ஆய்வாளரின் கடும் உழைப்பில் இது வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நூல் எழுதப்பட்ட காலத்தின் பின்னணியிலிருந்து இதைக் காணவேண்டும். வேறொரு பணிக்காக பிரான்சுவா குரோ அவர்களுடைய நூலகத்தை ஒழுங்குபடுத்தி ஆவணப்படுத்துவதற்காகச் சென்ற நண்பர் இதைக் கண்ணுற்று இதனுடைய அருமை தெரிந்து சீர்செய்து பதிவுசெய்து உடனடியாக வெளியிடாமல் அதில் எஞ்சியதை, ஏதேனும் விடுபட்டுப்போயிருக்கிறதா என்பதைத் தேடிக் காலநீட்டிப்பு ஆனாலும் அதன்பின்னாலுள்ள முழுமையையும் கொடுத்துவிடவேண்டும் என்ற வேட்கையோடு இதை ஆவணப் பதிவாக ஆக்கியிருப்பது என்ற இந்த இடத்தில்தான் இதனுடைய சிறப்பும் உழைப்பும் புரியவருகிறது.

பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார், பி.சா.சு. என்று தமிழுலகில் அறியப்பட்டவர். சமஸ்கிருதத்திலும் தொல்காப்பியம், புறநானூறு, அதன் உரைகள் ஆகியவற்றிலும் புலமையுடையவர். அவர் வாழ்ந்த சூழலுக்கேற்ப ஆங்கிலம் - தமிழ் - சமஸ்கிருதம் என்ற மூன்று மொழிகளிலும் புலமையுடையவர். என்னுடைய கல்வி அனுபவத்தில் ஆய்வு அனுபவத்தில் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரத்திற்குப் பிற்பாடு இந்தப் பன்மொழிப் புலமை என்பது அனேகமாகத் தமிழில் அருகிவிட்டது. இப்போது மீண்டும் சில அறிஞர்களுடைய இளைஞர்களுடைய வேட்கையின் காரணமாகத் தமிழ் – சமஸ்கிருதம் என்பவற்றைத் தேடிப் பிடிக்கின்ற ஒரு மனநிலை தெரிகின்றது. இது பாராட்டத்தகுந்த ஒன்று.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏறத்தாழ பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஐராவதம் மகாதேவன் அவர்களை அவர்களுடைய ஆங்கில நூலை மொழிபெயர்க்க வேண்டும் என்ற வேட்கையில் நான் சென்று அணுகிய நிலையில் சமஸ்கிருதம் தெரியுமா என்று கேட்டார்; பிராகிருதம் தெரியுமா என்று கேட்டார். இது ஒரு எதிர்பார்ப்பாக அறிஞர்கள் மத்தியில் இருந்திருக்கிறது. ஆனால் சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் தெரிந்தவர்கள்கூட பிராகிருதம், பாலியைத் தேடிப் படிக்கின்றவர்கள் அரிதாக இன்றும் இருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் இந்தத் தொகுப்பு நூலின் உள்ளே இருக்கக்கூடிய சில பதிவுகளை நான் சொல்லவேண்டும். இந்நூலின் இறுதியில் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரைகளில் அவர் முதன்முதலாகப் புறநானூற்றுப் பழைய உரை அல்லது பெயர் அறியப்படாத உரை என்று சொல்லப்படுகின்றதன் முதல் திறனாய்வு என்ற நிலையிலே இது போற்றத் தகுந்தது என்று நண்பர் சொல்கின்றார். அடிப்படையில் சமஸ்கிருதத்தோடு ஒப்பிட்டுக் காட்டும் ஆர்வத்தின் காரணமாக இதை மேற்கொண்டுள்ளார். தமிழில் இரண்டிலிருந்து 16ஆவது பாடல் வரையிலும் ஆங்கிலத்தில் இருபது பாடல் வரையிலும் மொழிபெயர்ப்பாக இது அமைந்திருக்கிறது. இந்த நூலினுடைய பொதுவான அமைப்பிலே, சாஸ்திரியாரின் உரையினுடைய பொதுவான அமைப்பிலே பாடல் பற்றிச் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிவிட்டு இறுதியிலே சில சொற்களை, சொற்களின் மூலங்களைப் பற்றி வரும்பொழுது சமஸ்கிருதக் கருத்தாக்கம் இருக்கின்றது. அதற்கு அடிப்படைக் காரணம் அவர் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் என்பதுதான்.

அடிப்படையிலே இது மறு ஆய்வுக்கு உரியதாக, தெ.பொ.மீ. கூறுவதைப் போல இந்த மூலங்களை சமஸ்கிருதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய கட்டாயம் இப்பொழுது இருக்கின்றது. அதில் நான் சிலவற்றை இங்கே சொல்ல வேண்டும். தொடக்க நிலையிலே, ப. 64-இலே தென்புலத்தாரைப் பற்றிச் சொல்கின்ற பகுதி வருகின்றது. இங்கு மிருதிநூலார் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். மிருதி என்பதில் முதல் சகரத்தை விட்டுவிட்டு அவர் எழுதியிருக்கின்றார். ஸ்மிருதி என்பது உபநிடதங்களைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். உபநிடதங்கள் பாடப்பட்டுத் தொகுக்கப்பட்ட காலம் பிற்பட்டது என்பதைப் பொதுவாக வடமொழி அறிஞர் ஒத்துக்கொள்வார்கள். இதைக் கொண்டு புறநானூற்றை விளக்க முற்படுவது என்பது முறையானதாக எனக்குத் தோன்றவில்லை. பிதிரர் என்ற சொல்லே தென்புலத்தாராக அமைந்திருக்கிறது என்று எழுதியுள்ளார். அதுபோல பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிச் சொல்கிறபொழுது ஸ்ரௌத சூத்திரத்தை அவர் மேற்கோள் காட்டுகிறார். யூபம் அல்லது தூண் சார்ந்து நடக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அவர் பேசுகின்றார்.

ஸ்ரௌத சூத்திரம் என்பது உபநிடதங்கள் போல பிற்காலத்தில் உருவான ஒரு நூல். வேத நூல்களின் மரபு அல்ல. (ஆகமங்களை வேத மரபாகக் கொண்டு கோயில்களில் வழிபடும் முறை சிவாச்சாரியர்களால் பின்பற்றப்படுகிறது. இவை வேதமரபல்ல). இது வேத மரபாகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்நூல் முழுவதுமாக ஆகமங்களை வைத்துக்கொண்டு சான்றாக காமிக ஆகமம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது, அதற்கு மறுபெயராக இந்த ஸ்ரௌத சூத்திரம் என்பது வருகின்றது. ஆகமங்களினுடைய காலம் என்பது வேத காலத்திலிருந்து மிகவும் பிற்பட்டது என்பதை புதுச்சேரியினுடைய பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வுக் கழகத்திலே பட் போன்றவர்கள் வெளியிட்ட நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு மு.அருணாசலம் போன்றவர்கள் இக்கருத்துகளை ஏற்றுக்கொண்டு இவற்றை விளக்குவார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்பொழுது பிற்கால ஆகம நூல்களைச் சான்றாக எடுத்துக்கொண்டு புறநானூற்றுடன் பொருத்திப் பார்க்க கருவியாகப் பயன்படுத்துவது ஏற்புடையதா என்ற கேள்வி எனக்கு எழுகின்றது.

எனவே இது பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இது போல பல இடங்கள் ஆராய வேண்டிய தேவை இருந்தாலும் ஒரு சிலவற்றை மட்டும் சான்றுக்காக நான் இங்கு சொல்கிறேன். புறநானூற்றில் இரண்டாம் பாடலின் இறுதியில் அந்தி என்ற வார்த்தையை ஸந்தியா என்னும் சமஸ்கிருதச் சொல்லோடு தொடர்புபடுத்துகிறார். அந்தி என்ற சொல் தொடர்ந்து தமிழ் வழக்கிலே இருந்திருக்கிறது. சமஸ்கிருதச் சொல்லும் தமிழ்ச் சொல்லும் இணையானது என்று சொல்லலாமே தவிர இதிலிருந்து அது கடன்வாங்கப்பட்டது என்று சொல்லிவிடமுடியாது. தற்சமம் தற்பவம் என்பவற்றையெல்லாம் சில சான்றுகளை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லிவிடமுடியாது. இவற்றுக்கு நீண்ட மரபு இருக்கிறது. இரண்டு மொழிகளிலும் இவை போன்ற சொற்கள் இருக்கின்றன.

எனவே சுலபமாக இது ஸந்தியா என்னும் சொல்லிலிருந்து வந்தது; இது தற்பவம் என்று அவர் சொல்வது பொருத்தமாகப்படவில்லை. இதுபோன்றதான நிலையில்தான் பல சொற்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. ‘கான்’ என்னும் சொல்லிலிருந்துதான் கானகம் என்ற சொல் உருவாகிறது என்று கூறி இந்தச் சொல்லை வடமொழியில் இருக்கக்கூடிய கானகம் என்பதுடன் ஒப்பிட்டு அதுதான் இது; அதனுடைய திரிபாக இந்தச் சொல் உருவானது என்று சாஸ்திரியார் சொல்வதும் சரியல்ல. இதுபோன்றதான பல சான்றுகளை இந்த நூலிலிருந்து சொல்லலாம். யூபத்தைப் பற்றிக்கூட இன்னொரு கருத்து இருக்கின்றது. செயல் முடிந்த நிலையில் நிறுவப்பட்டதாக யூபத்தைப் பற்றி சாஸ்திரியார் சொல்கின்றார். ஆனால் பாடலின் பொருள் அதுவல்ல. வழிபாட்டின் இறுதியில் செய்யப்படுவதாக ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதென்று தொடக்கத்திலேயே நிறுவிவிடுகின்றார்கள். எனவே வடமொழி நிலையிலேயே இந்தச் சொல் ஆராய்ச்சி நின்றுவிட்டது. 

பிற்காலத்திலே அரசர்கள் ஜயஸ்தம்பம் நாட்டுவதென்பது அரசியலோடு தொடர்புபெறுகின்றது. தமிழ் மரபில் அதற்கு அடுத்த நிலையிலே திருக்கோயில்களிலே இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய கொடிமரமாக வளர்ச்சிபெற்றது. ஜயஸ்தம்பம் என்பதே கோயில்களில் கொடிமரமாக நிறுவப்பட்டது என்பதை இலங்கையைச் சேர்ந்த கைலாசநாத குருக்கள் போன்றவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள். காரணம், வேத காலத்தில் குறிப்பாக ரிக் வேத காலத்தில் திசைத் தெய்வங்களைத்தான் குறிப்பாக இந்திரன் உள்ளிட்ட தெய்வங்களைத்தான் வழிபடு கடவுளாகக் கொண்டார்களே தவிர இப்பொழுது இருக்கிற மாதிரியான வழிபாடுகள் இல்லை. இது காலத்தினுடைய வளர்ச்சி. எனவே வேத காலத்தில் இல்லாத ஒன்றை வலிந்து இங்கே கொண்டுவந்து ஒப்பிட்டு சிவனை முழுமுதலாகக் கொண்ட வேள்வி நிகழ்ந்தது என்று சொல்லி இணைப்பதென்பது ஏற்புடையதாக இல்லை. ஆக இதுபோன்ற கீழே கொடுக்கக்கூடிய சொற்களைக் குறித்த சாஸ்திரியாரின் துணிபு அல்லது முடிவு என்பது முழுவதுமாக மறுசிந்தனைக்குரியதாக இருக்கிறது. சில சொற்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாகியிருக்கலாம் என்ற தெளிவான வரையறுக்கப்பட்ட சான்றுகள் இப்பொழுது இல்லாத நிலையில் நான் இது குறித்து மேலும் சொல்லமுடியாது. காரணம், தமிழில் இருப்பதைப் போல சமஸ்கிருத்தில் நூல்களைப் பற்றிய கால வரன்முறை பெரும்பாலும் இல்லை.

அறிஞர்கள் மத்தியிலே இதைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. அதனால் அந்த அடிப்படையிலிருந்தும் இவற்றைச் சுலபமாக விலக்கிவிடலாம். அடிப்படையில் இந்த அளவுகோல்களை வைத்துப் பார்க்கும்பொழுது இந்தச் சொற்களின் மூலம் குறித்த அவரது பார்வை மறுசிந்தனைக்கும் மூலங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியதற்குமான அடிப்படைத் தேவையையும் நமக்கு உணர்த்துகின்றது. ஒரு சில சான்றுகளை மட்டும் நான் விளக்கினேன். முழுவதுமாக எல்லாவற்றையும் அலசிப் பார்க்கின்றபொழுது இது விளக்கமாகத் தெரியும் என்பதை மட்டும் நான் சொல்லவேண்டும். இதைத் தவிர்த்து அந்தக் காலகட்டத்தின் பின்னணியிலே பார்க்கின்றபொழுது நூலை உருவாக்க அவர் செலுத்திய உழைப்பு, நூலின் கட்டமைப்பு, அதற்கான சான்றுகளை எல்லாம் தேடித் தொகுத்துக் காட்டுகின்ற முறை, அவருடைய அணுகுமுறை ஆகியவற்றைக் குறைசொல்லமுடியாது.

சங்க நூல்களை ஆராய காலத்தால் பிற்பட்ட தமிழ் இலக்கண நூல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்ற குரல் சமஸ்கிருத நூல்களுக்கும் பொருந்தும்; ஆனால் ஒரு சமஸ்கிருத ஆசிரியராக இருந்துகொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்ட காரணத்தால் பிற்கால சமஸ்கிருத நூல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் இன்றைக்கும்கூட ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் இண்டாலஜி துறையில் சமஸ்கிருதம் படித்தவர்கள்தான் தமிழ் ஆராய்ச்சிக்கு வருகின்றார்கள். சமஸ்கிருதம் அல்லது பிராகிருதம் இல்லாமல் அவர்கள் ஆராய்ச்சி செய்யமுடியாது. ஆனால் அதுபோல ஆராய்ச்சி செய்ய வருகின்றபொழுது அந்தக் கண்ணாடியை அணிந்துகொண்டு அதைப் பார்ப்பது என்பது ஏற்புடையதாகுமா என்ற கேள்விதான் திரும்பத் திரும்ப வருகிறது.

அதனால் இதையெல்லாம் வைத்துக்கொண்டு இந்த மூலங்களை முழுவதுமாகச் சோதித்துப் பார்க்கவேண்டும் என்ற தேவை இருக்கிறது என்பதைமட்டும் இந்த இடத்தில் குறித்துக்கொள்ளவேண்டும். மற்றபடி சாஸ்திரியாரின்  கட்டுரைகள், அவை வெளியான காலகட்டத்தில் அவற்றை நாம் குறைத்து மதிப்பிடமுடியாது. இது மிகப்பெரிய ஆவணமாக, பங்களிப்பாக இருந்திருக்கிறது. இதுவரை பதிவாகாத ஒன்றை முத்து வெ.பிரகாஷ் இதில் வெளிப்படுத்தியிருக்கின்றார். அவருடைய ஆவணப்படுத்தவேண்டுமென்ற இந்த முயற்சியும் அதற்கான உழைப்பும் அதற்குரிய தேடல்வேட்கையும் பாராட்டத்தகுந்தன.

புத்தகத்தைப் வாங்க -https://thadagam.com/products/purananutru-kurippu

Back to blog