தடாகம் வெளியீடு
ஆயர்கள்
ஆயர்கள்
மனிதர்கள் வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையிலிருந்து, கால்நடைகளைப் பழக்கப்படுத்திப் பயன்பெறும் நிலைக்கு உயர்ந்தனர். கால்நடைகளுக்காக மேய்ச்சல் வெளிகளைத் தேடி இடம் பெயர்ந்த நிலையில், கால்நடைகளைக் கொண்டு, வேளாண்மை ஒருபுறம் வளர்ந்தது. தொடர்ந்து கால்நடைகளை மையமிட்டே தம்முடைய வாழ்வியலை அமைத்துக்கொண்ட மேய்ச்சல் நில மக்கள் குழுக்கள், ஆயர் என்று அழைக்கப்பெற்றனர். ஆயர்கள் என்பது மேய்ச்சல் நில மக்களின் பொதுப்பெயராகும். இவர்கள் வாழ்ந்த மேய்ச்சல் வெளி, காடு முதலானவை முல்லை நிலம் எனப்பட்டது. மனித நாகரிகம் முல்லை நிலத்தில்தான் பல்கிப்பெருகியது என்று அறிஞர்கள் இயம்புவர்.
இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு பிரிவினராகக் கிளைத்து நிற்கும் மக்கள் குழுக்களுள், கால்நடைகளை மட்டுமே நம்பியுள்ள மேய்ச்சல் நில மக்களின் வாழ்வியல், தனித்துவமானதாகும். ஒரு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியையும், அறுபடாத மரபையும் கொண்டுள்ள மக்கள் குழுக்களுள், ஆயர் குழுக்கள் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
ஆயர்கள் குறித்த ஆய்வு, மாந்த இனத்தின் தோற்றுவாயோடு தொடர்புடையதாகத் திகழ்கிறது. இந்திய நிலப்பரப்பில் வரலாற்றுக் காலத்திலிருந்து ஆயர்கள் குறித்த பதிவுகள் சேகரிக்கப்பெற்று, வரலாற்றாய்வாளர்களின் மேற்கோள்களோடு அவர்தம் வரலாற்றை இந்நூல் சுருக்கமாக உரைக்கின்றது.